Monday 12 May 2014

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு என்று ஒரு சிறப்பிடம் இருக்கிறது. அது ஹீரோக்களே பொறாமைப்படும் இடம். கவுண்டமணி, வடிவேலு தொட்ட உயரங்களை தொட்ட ஹீரோக்கள் மிக அறிது.

புகழ் மட்டுமல்ல.. பணத்திலும் காமெடி நடிகர்களின் இடம் பெரும்பாலான ஹீரோக்கள் பொறாமைப்படும் படும் இடம் என்றால் மிகையில்லை. ஒரு படத்திற்கான சம்பளம் என்று கணக்கெடுத்தால் ஹீரோக்கள் முன்னால் வரலாம்.

ஆனால் ஒரு வருடத்தின் சம்பாத்தியம் என்றால் ஓரிண்டு ஹீராக்களை தவிர மற்றவர்கள் எல்லாரும் பிஸியான காமெடியன்களுக்கு பின்னால்தான் வருவார்கள்.
vallavanukku-pullum-aayutham-vimarchanam


ஆனாலும் இந்த முன்னனி காமெடியன்களுக்கு ஏனோ மனதில் ஒரு தீராத ஏக்கம் இந்த ஹீரோக்களை பார்த்து.. நாமளும் ஹீரோவாகனும் என. அதுவும் சந்தானத்திற்கு அந்த ஏக்கம் ஏன் பிய்த்துகொண்டு வந்தது.

இந்த ஆண்டில் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. விஜய் டிவியின் நீயா நானாவாகிப்போன அந்த அடங்கா ஏக்கத்தின் விளைவுதான் இந்த வல்லனுக்கு புல்லும் ஆயுதம்.

வழக்கமான ஹீரோக்கள் போலவே சந்தானமும் உடம்பை குறைத்து மெருகேறி, மேக்கப்பேறி, வெறியேறி வந்து ஓப்பனிங் தத்துவ பாடலோடு அறிமுகமாகிறார். பாடல் முடிந்ததும் அனாதையாய் சைக்கிளில் தண்ணிகேன் சப்ளை செய்கிறார்.

வேலையிழந்து ஃபீல் செய்கிறார். ப்ளாஸ்பேக் சொத்து விபரம் கேட்டு தேடி ட்ரெயினில் செல்கிறார். ட்ரெயின் ஏற வழக்கம்போல ஓடி வரும் ஹீரோயினுக்கு கை குடுத்து கீழே விழுந்து, அங்கே வரும் ராஜகுமாரன் கோஸ்டியை கலாய்க்கிறேன் பேர்வழி என பல மொக்கைகளை போட்டுவிட்டு ஊருக்கு போகிறார்.

அங்கே ஆயிரம் ஜன்னல் வீட்டில் இரண்டாயிரம் அறுவாள்களுடன் அடியாட்கள் காத்திருக்கிறார்கள்.. அதுக்கு ஒரு இரத்தம் தெறிக்கும் ப்ளாஸ்பேக் என முதல்பாதி முதுவதும் போன ஜேனரேசன் தெலுங்கு படத்தை ப்ரேம் பை ஃப்ரேம் பிழிந்து ஊட்டிவிடுகிறார்கள்.

இதிலெல்லாம் சந்தானத்தை பார்க்கும் போது செரிக்காத பிரியாணியால 7Up தேடுர ஃபீலிங். எதையெல்லாம் கிண்டல் செய்து அவர் உருவானாரோ அதையே அவர் செய்வதைப் பார்க்கும் போது வாழ்க்கை ஒரு வட்டம்டா என கட்டம் சொல்வது கேட்கிறது.

ராஜமௌலி மிகத்திறமையான இயக்குநர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் தெலுங்கில் இயக்கிய மரியாதை ராமண்ணா படம் அங்கே செம ஹிட்டடித்தது. ஆனால் எல்லா தெலுங்கு ஹிட் படங்களும் தமிழில் செட்டாகும், ஹிட்டாகும் எனபதற்கில்லை.

தெலுங்கில் அவர் எப்படி எடுத்திருந்தாரோ.. அதை இவர்கள் தமிழில் எடுத்திருப்பதை பார்க்கும்போது ம்ஹூம். வரும் ஆனா வராது ரகமாய் தான் வந்திருக்கிறது.

வில்லனுக்கு ஒரு நல்ல பழக்கம்.. வீட்டுக்குள் யாரையும் வெட்ட மாட்டார். அந்த வில்லன் வீட்டுக்குள் தானே போய் மாட்டிக்கொள்கிறார் சந்தானம்.

இவரை வெட்டுவதற்காகத்தான் 28 வருடமாய் டெய்லி காலண்டரை பார்த்து காத்துக்கொண்டிருத்த அந்த வில்லன் கோஷ்டி அறுவாள்களை தீட்டி வாசலில் காத்திருக்கிறது. அவர்களை இவர் எப்படி சமாளித்து சுபமாக்குகிறார் என்பதுதான் மீதிக்கதை.

வீட்டை விட்டு வெளியே வந்தால் வெட்டி விடுவார்கள் என்பதால் வீட்டுக்குள்ளேயே இருந்தும் சமாளிக்கும் ஹீரோ என்ற ஒருவரி சுவாரஸ்யமானதுதான்.

அதை காட்சிப்படுத்தி படமாக்கியிருக்கும் விதம்தான் கொஞ்சம் சறுக்கி ஏனோதானோவாகியிருக்கிறது. இவர் ட்ராமா ஆடுகிறார் எனத் தெரிந்தும் அந்த வில்லன் கோஷ்டி வெளியே நின்று வேடிக்கை பார்ப்பது விளையாட்டுத்தனமாய் இருக்கிறது. வீட்டுக்குள்ள வெட்டத்தான் மாட்டாங்க.. கட்டி தூக்கிட்டு வெளியே போகத்தெரியாதா சார் அந்த அறுவாள் கோஷ்டிக்கு?

தப்பிப்பதற்காக போஸ்ட் கம்பத்தில் ஏறி மாட்டிக்கொள்ளும் இடமும் அதில் தப்பிப்பதும் சுவாரஸ்யம். விடிவி கணேஷ் கொஞ்ச நேரம் வந்தாலும் கலகலப்பாக்குகிறார்.

சந்தானம் காமெடியனாய் வரும் படங்களில் இருக்கும் அளவுக்கு கூட இதில் காமெடி இல்லை… முயற்சி செய்திருக்கிறார்கள்… சிரிப்பு தான் வரவில்லை.. விதிவிலக்காய் சில இடங்கள்.. உதாரணம் அக்குள்ல என்ன கட்டியா என கேட்டதும் சுடுதண்ணியை தானே தலையில் கொட்டிக்கொள்ளுமிடம்.

படத்தில் உருப்படியான விசயம். கதாநாயகிதான். அஸ்னா சாவேரி..அத்தனை அழகான முகம். போஸ்டர்களைவிட படத்தில் இன்னும் அழகாய் ஜொலிக்கிறார். கவர்ச்சி உடைகளில் கொஞ்சம் சுமாராய் தெரிந்தாலும் நல்ல எதிர்காலம் இப்பொழுதே கதவை தட்டத்துவங்கியிருக்கும்.

க்ளைமாக்ஸில் அந்த பிரம்மாண்டமான மரப்பாலத்தில் ஒற்றைப் பலகையை இழுத்துப்போட்டு அந்த ஆயிரம் அறுவாள் வீச்சை சமாளிக்கும் காட்சியை விறுவிறுப்பாய் படமாக்கியிருக்கிறார் ரிச்சர்ட் எம் நாதன்.

ஆனால் அந்த தருணத்தில் தான் கதாநாயகி தன்னை விரும்பியிருக்கிறாள் எனத்தெரிந்ததும் சந்தானம் அந்த அறுவாள் மழைக்குள் தானே வந்து மாட்டிக்கொண்டு மரண அடி வாங்குவதெல்லாம்… போங்க பாஸ்..

இயக்கம் ஸ்ரீநாத். இன்னும் கொஞ்சம் முயற்சியெடுத்திருக்கலாம். தெலுங்கு வாடையை தவிர்த்திருக்கலாம். லாஜிக் ஓட்டைகளை அடைத்திருக்கலாம்.

சந்தானம் ஹீரோவாக ஆசைப்படுவதில் தப்பில்லை..ஹீரோவாய் நடிக்கிறேன் என முடிவெடுத்ததும் அதற்காக மென்கெட்டு உடல் எடையே குறைத்து, நடனம் கற்று என அவரது ஹோம்வொர்கை பாராட்ட வேண்டும்.

ஆனால் தனக்கும், தன் பலத்திற்கும் பொருத்தமான கதையை, கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தால் தான் அவர் முன்னோக்கி செல்ல முடியும். இல்லாவிட்டால் இருக்குற இடத்தையும் எவனாச்சும் வந்து குழப்பிவிட்டுடுவான் என்பது சந்தானத்தும் தெரியும் என நினைக்கிறோம்.

Thanks and Soruce: Soundcameraaction

0 comments

Post a Comment