Thursday 17 April 2014

BJP கூட்டணி வெற்றிபெற பாடுபடுங்கள்; மு.க. அழகிரி

பாஜக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு மு.க.அழகிரி உத்தரவிட்டுள்ளதாக அவருடைய ஆதரவாளரும் மதுரை முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியன் தெரிவித்தார்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மாவட்டம்தோறும் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடியை அழகிரி சந்திக்கலாம் என்ற பேச்சும் இருந்துவந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் அழகிரி ஆதரவாளர்கள் பலரும் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மதுரை மாநகர திமுகவின் ஒவ்வொரு வட்டத்தில் இருந்தும் அழகிரி ஆதரவு திமுக நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் பணி குறித்து தங்களது மனக் குறையை வெளிப்படுத்தினர். தங்களை திமுகவினர் தேர்தல் பணிக்கு அழைப்பதில்லை என குற்றம்சாட்டினர்.


உங்களது முடிவை அறிவியுங்கள் என்றும் வலியுறுத்தினர். அவர்களிடம் சில ஆலோசனைகளை அழகிரி கூறினார்.

அழகிரியைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த அவரது தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மிசா பாண்டியனிடம் கேட்டதற்கு, நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும்.

ஆகவே, பாஜக கூட்டணியின் வெற்றிக்கு தேர்தல் பணியாற்றுமாறு அழகிரி கூறியுள்ளார்.

இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக அணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க உள்ளோம். சோலையழகுபுரம் பகுதியில் வேட்பாளர் சிவமுத்துக்குமார் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரிக்க வருகிறார்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளோம் என்றார். மேலும், அவர்கள் முரசு சின்னம் அச்சிட்ட பேட்ஜுகளையும் வைத்திருந்தனர்.

நான் அப்படிக் கூறவில்லை: அழகிரி

 எந்த கட்சியையும் ஆதரித்து வேலை செய்யுமாறு கூறவில்லை என்று அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அழகிரியிடம் தொலைபேசியில் கேட்டதற்கு, திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும். அதற்கான வேலையைப் பாருங்கள் எனக் கூறியுள்ளேன்.

எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு ஆதரவு அளிக்குமாறும், தேர்தல் பணியாற்றுமாறும் கூறவில்லை. உங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.

0 comments

Post a Comment